காசா பகுதிக்கு அத்தியாவசிய உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற 50-க்கும் மேற்பட்ட படகுகளைக் கொண்ட சர்வதேச தரைவழி-கடல்வழிப் பயணக் குழுவை (Flotilla), சைப்ரஸிற்கு மேற்கே உள்ள சர்வதேச கடல் பகுதியில் வைத்து இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து முற்றுகையிட்டுள்ளனர்.
‘குளோபல் சுமுத் புளோட்டிலா’ (Global Sumud Flotilla – GSF) என்ற பாலஸ்தீன ஆதரவு மனிதநேய அமைப்பு, இஸ்ரேலின் கடல்சார் முற்றுகைக்கு உட்பட்டுள்ள காசாவிலிருந்து சுமார் 250 கடல் மைல் (460 கிலோமீட்டர்) தொலைவில் தங்களது படகுக் குழு பயணித்துக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சர்வதேச கடல் விதிகளுக்கு முரணாக, இஸ்ரேல் “மீண்டுமொரு சட்டவிரோத கடல்கொள்ளை ஆக்கிரமிப்பை” நிகழ்த்தியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள அந்த அமைப்பு, இஸ்ரேலிய கமாண்டோ படையினர் தங்களது பல படகுகளுக்குள் பலவந்தமாக ஏறும் நேரடி வீடியோ காட்சிகளையும் வௌியிட்டுள்ளது.
இந்த விசேட இராணுவ நடவடிக்கை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வௌியிட்டுள்ள அறிக்கையில்: “காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளைத் தனிமைப்படுத்துவதற்காக நாங்கள் விதித்துள்ள தடையை உடைப்பதற்காகத் திட்டமிடப்பட்ட ஒரு தீய சதியை, எங்களது படைகளின் இந்த அதிரடி நடவடிக்கை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதமும் இதே அமைப்பைச் சேர்ந்த 22 படகுகளை கிரீட் (Crete) தீவுக்கு அருகே இஸ்ரேலியப் படையினர் இடைமறித்திருந்தனர்.
அந்தச் சம்பவத்தின் போது படகிலிருந்த 181 ஆர்வலர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.
சர்வதேச நாடுகளின் பலத்த கண்டனத்தை அடுத்து, அவர்களில் இருவரைத் தவிர மற்ற அனைவரும் அடுத்த நாளே கிரேக்கத் தீவில் விடுவிக்கப்பட்டனர்.
எனினும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சைப் அபு கெஷெக் மற்றும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த தியாகோ ஆவிலா ஆகியோர் மேலதிக விசாரணைக்காக இஸ்ரேலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, 10 நாட்கள் காவலில் வைக்கப்பட்ட பின்னர் நாடுகடத்தப்பட்டனர்.
அதன் பின்னர், இந்த நிவாரணக் குழுவின் எஞ்சிய படகுகள் துருக்கியின் மர்மாரிஸ் (Marmaris) துறைமுகத்திற்குச் சென்றடைந்தன.
அங்கிருந்து 45 நாடுகளைச் சேர்ந்த 460-க்கும் மேற்பட்ட மனிதநேய ஆர்வலர்களுடன் 54 படகுகள் கடந்த வியாழக்கிழமை மீண்டும் காசாவை நோக்கித் தென்கிழக்கு திசையில் பயணத்தைத் தொடங்கின.
இந்நிலையிலேயே, அவை சைப்ரஸ் அருகே இஸ்ரேலிய கமாண்டோக்களினால் தற்போது நடுக்கடலில் மறிக்கப்பட்டுள்ளன.














