ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலையை மேலும் நீட்டித்து, சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் நேற்றிரவு இந்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.
அதன்படி, பொதுப் பாதுகாப்பையும் நாட்டின் முறையான செயல்பாட்டையும் உறுதி செய்வதற்கும், பொது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விநியோகம் மற்றும் சேவைகளைத் தடையின்றிப் பராமரிப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை மின்சாரம், குடிநீர், சுகாதாரம், உணவு மற்றும் போக்குவரத்து, தகவல் தொடர்பு, ஒளிபரப்பு மற்றும் ஊடகம் உள்ளிட்ட 15 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பொது மக்கள் அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
எந்தவொரு அரச கூட்டுத்தாபனம், அரசாங்க திணைக்களம், உள்ளூராட்சி மன்றம் அல்லது கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் மூலம் வழங்கப்படும் இந்தச் சேவைகளுக்கு எவ்வித தடங்கல்களும் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக்க சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.


















