பிரித்தானியாவிற்குள் நுழையும் அகதிகளில், தங்களைச் சிறுவர்கள் எனக் கூறி ஏமாற்ற நினைக்கும் பெரியவர்களைக் கண்டறிவதற்காக, செயற்கை நுண்ணறிவு மூலமான முக அங்கீகார (Facial Recognition) தொழில்நுட்பத்தை அடுத்த ஆண்டு (2027) முதல் எல்லையில் பயன்படுத்த பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எல்லைகளில் எடுக்கப்படும் அகதிகளின் புகைப்படங்களை பகுப்பாய்வு செய்து, அவர்களின் உண்மையான வயதைக் கணிக்கும் இந்த மென்பொருளை உருவாக்குவதற்கும், அதனைச் சோதித்துப் பார்ப்பதற்குமான ஒப்பந்தம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியச் சட்டங்களின்படி, துணையின்றி தனியாக வரும் சிறுவர் அகதிகள் பொதுவான அகதிகள் முகாம்களுக்கு அனுப்பப்படாமல், சிறப்புப் பராமரிப்பு அமைப்புகளின் கீழ் பாதுகாக்கப்படுவார்கள்.
இது அவர்கள் பிரித்தானியாவில் தொடர்ந்து தங்கியிருப்பதற்கான வாய்ப்புகளை எளிதாக்குகிறது.
இதன் காரணமாகவே பலர் தங்களைச் சிறுவர்கள் எனப் பொய்யான விபரங்களைக் கூறி வருகின்றனர்.
கடந்த சில வருடங்களாக ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சிறிய படகுகள் மூலம் பிரித்தானியாவிற்குள் நுழைந்து புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இதேவேளை , கடந்த 2026 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த ஓராண்டு காலத்தில், தங்களைச் சிறுவர்கள் எனக் கூறி எல்லையில் நுழைந்த 6,400-க்கும் மேற்பட்ட அகதிகளிடம் நடத்தப்பட்ட வயதுப் பரிசோதனையில், சுமார் 43% பேர் பெரியவர்கள் என்பது உள்நாட்டு அமைச்சின் தரவுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த புதிய திட்டத்திற்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், இத்திட்டத்தைக் கைவிடுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இது இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படாத ஒரு தொழில்நுட்பம் இதனைப் பயன்படுத்துவதன் மூலம், உண்மையாகவே பாதுகாப்புத் தேவைப்படும் பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களுக்கான உரிமைகளும் பாதுகாப்புகளும் பறிபோகும் அபாயம் உள்ளது.
மனித உரிமை அமைப்புகளின் விமர்சனங்களுக்கு மத்தியிலும், எல்லையோரப் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் பிரித்தானிய அரசாங்கம் இந்த AI தொழில்நுட்பத்தை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த தீவிரமாகத் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.














