தெற்கு யார்க்ஷயரில் (South Yorkshire) உள்ள டான் ஆற்றில் நீராட சென்று காணாமல் போன 11 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மெக்ஸ்பரோ (Mexborough) பகுதியில் உள்ள ஃபெர்ரி போட் லேன் அருகே கடந்த சனிக்கிழமை இரவு 8:00 மணியளவில், மெக்கென்சி ஸ்விஃப்ட் (Mackenzie Swift) என்ற 11 வயது சிறுவன் ஆற்று நீருக்குள் சென்றதை அங்கிருந்தவர்கள் கடைசியாகப் பார்த்துள்ளனர்.
அதன் பின்னர் சிறுவன் காணாமல்போயுள்ளார்.
சிறுவனைக் கண்டுபிடிப்பதற்காக சுழியோடிகள் கொண்டு தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இரவு 11:00 மணியளவில் சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட உடல் காணாமல் போன மெக்கென்சியின் உடல் தான் என்பது குறித்து அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான மனநல மற்றும் நிபுணத்துவ ஆதரவுகள் வழங்கப்பட்டு வருவதாகக் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.
பிரிட்டனில் அண்மைக் காலமாக நிலவி வரும் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக, பலர் நீர்நிலைகளுக்குச் சென்று ஆபத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, இந்த வெப்பமான காலநிலையில் திறந்தவெளி நீர்நிலைகளில் இறங்கி, உயிரிழந்த 16-வது நபர் சிறுவன் மெக்கென்சி என்பது குறிப்பிடத்தக்கது.














