மேற்கு கொலம்பியாவைத் திங்களன்று (10) தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 111 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலநடுக்கம் பல நகரங்களில் கட்டிடங்களைச் சரித்ததுடன், மருத்துவமனைகள் மற்றும் உள்கட்டமைப்புகளையும் சேதப்படுத்தியது.
மேலும் இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கிக்கொண்டனர்.
இது இந்த நூற்றாண்டில் கொலம்பியாவில் பதிவான மிக வலிமையான நிலநடுக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லா (Abelardo De La Espriella) ஜனாதிபதியாக பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அண்டை நாடான வெனிசுலாவில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட பேரழிவுகரமான இரட்டை நிலநடுக்கங்களின் நினைவுகள் இன்னும் பசுமையாக இருக்கும் நிலையில், இந்த நிகழ்வு புதிய நிர்வாகத்தை அதன் முதல் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.
அனர்த்தத்தில் 111 பேர் உயிரிழந்ததாகவும், 87 பேர் காயமடைந்ததாகவும், அத்துடன் டஜன் கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தும் வீடுகள் சேதமடைந்தும் உள்ளதாக ஆரம்பக்கட்ட அறிக்கைகள் தெரிவிப்பதாக டி லா எஸ்ப்ரியெல்லா கூறினார்.
ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், 107 கி.மீ (66 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அண்டை நாடுகளான வெனிசுலா, எக்குவாடோர் மற்றும் பனாமா வரையிலும் இந்த நில அதிர்வுகள் உணரப்பட்டன.
21-ஆம் நூற்றாண்டில் கொலம்பியாவில் பதிவான மிக வலிமையான நிலநடுக்கம் இதுவே என்று அந்நாட்டின் புவியியல் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
கொலம்பியா, நில அதிர்வு மிகுந்த பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ளது.
இங்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான, பெரும்பாலும் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகின்றன.
வெனிசுலாவின் வடக்குப் பகுதியைச் சீர்குலைத்து 6,300-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்பட்டு இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில், இந்த நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.







