நெல்லுக்கான உத்தரவாத விலையினையும், அரிசியின் கட்டுப்பாடு விலையினையும் விரைவாக அறிவிக்கவேண்டுமென வட மாகாண ஆளுநரிடம் பசுந்தேசம் அமைப்பு, மகஜர் ஒன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த மகஜரில் ” நெல்லுக்கான உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை இதுவரை வர்த்தமானியில் வெளியிப்படவில்லை எனவும், எனவே நெல் கிலோ ஒன்றின் உறுதியான விலையினையும், அரிசி கிலோ ஒன்றின் உறுதியான விலையினையும், உடனடியாக அறிவித்து அதனை வர்த்தமானியில் வெளியிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை காலமும் இலங்கையில் ஆண்டுதோறும் 40 லட்சம் மெற்றிக்தொன் நெல் உற்பத்தி செய்யப்படுகின்ற நிலையில், அவற்றில் 10ஆயிரம் மெற்றிக்தொன் அளவிலான நெல்லே அரசாங்கத்தால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது எனவும், கடந்த ஆண்டுகளில் அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து சுமார் 5000 மெற்றிக்தொன் அரிசியினையே கொள்வனவு செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் அரச உணவுக்களஞ்சியங்கள், நெற்களஞ்சியங்கள் புனரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்கவேண்டும் எனவும், அதற்கு முன்னர் இம்முறை உலர் அரிசி மற்றும் ஈர அரிசியை நெல்லினை உரிய தரத்திற்கு ஏற்ப கொள்வனவுசெய்து அதற்கு உடனடியாக களஞ்சிய வசதியை பயன்படுத்துவதற்கு அரிசி சந்தைப்படுத்தல் சபையானது சுமார் 2 லட்சம் மெட்றிக்தொன் அரிசியை சேமித்து வைக்கக்கூடிய சேமிப்புத்திறனைக் கொண்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் உணவுத்திணைக்களம், ச.தொ.ச ஆகிய நிறுவனங்களில் நெற்களஞ்சியங்களையும் பயன்படுத்துவதுவதன் மூலம் ஏறத்தாள 3 லட்சம் மெட்றிக்தொன் வரையான நெல்லினை கொள்வனவுசெய்து சேமிக்கமுடியும் எனவும், நெல் அறுவடை காலங்களில் உலரவிடும் தளங்கள் இல்லாமையால் விவசாயிகள் வீதிகளில் நெல்லினை உலரவிடுவதால் வீதிகளின் நெருக்கடி மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன எனவும் இதனை கருத்தில் எடுத்து அதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் எனவும், தற்போது அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் நாவற்குழி உணவுக்கு களஞ்சியம் போன்ற இடங்களில் நெல் அறுவடை காலங்களில் நெல் உலரவிடுவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படவேண்டும் எனவும் குறித்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.