துபாயில் இருந்து இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பான பல தகவல்களுடன், 180 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை தொடுவாவை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கடல் வழியாக போதைப்பொருள் தொகையை கொண்டு வந்த குழுவுக்கு இந்த பணம் வழங்கப்படவிருந்ததாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாரவில, தொடுவாவை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் நேற்று (23) இரவு மஹவெவ, சிவிராஜ மாவத்தையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டி ஒன்றை சோதனை செய்துள்ளனர்.
இதன்போது, முச்சக்கர வண்டியில் இருந்த கறுப்பு நிற பயணப் பையை பரிசோதித்தபோது, அதில் பெருந்தொகையான பணம் இருப்பதை அதிகாரிகள் கண்டு பிடித்ததுடன் முச்சக்கர வண்டியில் இருந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 19ஆம் திகதி பேருவலை அருகே கடலில், சுமார் 300 கிலோகிராம் போதைப்பொருள் தொகை பலநாள் மீன்பிடி படகு மூலம் இலங்கைக்கு கொண்டு வந்தமை தெரியவந்துள்ளதுடன் குறித்த படகில் இருந்த கேப்டன் உட்பட 6 பேருக்கு தலா 30 இலட்சம் ரூபாய் வீதம் பணம் வழங்குவதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாகவும் விசாரணைமூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், துபாயில் இருந்து இயக்கப்படும் இந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய இலங்கையை சேர்ந்த நபர்கள், சிலாபம், தொடுவாவை, நீர்க்கொழும்பு , மாத்தறை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் இதுவரை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.