வடக்கில் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரியாவது தவறிழைத்தாலோ, ஊழலில் ஈடுபட்டாலோ அல்லது பாரபட்சம் காட்டினாலோ அவருக்கு எதிராகக் கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதில் எவ்வித சமரசமும் இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைய நாட்களில் உதவித்தொகை வழங்கல் தொடர்பில் முன்வைக்கப்படும் பல்வேறு கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்திய ஆளுநர், இது குறித்து விசேட தெளிவுபடுத்தலை வெளியிட்டார்.
மேலும், ஜனநாயகக் கட்டமைப்பில் அரச செயற்பாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுவதையும், விழிப்புடன் இருப்பதையும் நாம் வரவேற்கின்றோம். ஆனால், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்கள் மத்தியில், உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி குழப்பத்தை ஏற்படுத்துவதைத் தவிர்ப்பது சமூகப் பொறுப்புள்ள அனைவரதும் கடமையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உதவித்தொகை வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருடன் விரிவாகக் கலந்துரையாடியதாகவும் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட சுற்றறிக்கைகளுக்கு அமையவே பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் கிராமமட்ட ஏனைய அலுவலர்கள் ஊடாகத் தெரிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
இதில் எவ்வித இரகசியத் தன்மையும் இல்லை எனவும் உதவித்தொகை பெறத் தகுதியானவர்களின் பெயர்ப்பட்டியல் அந்தந்தப் பகுதிகளில் பகிரங்கமாகத் காட்சிப்படுத்தப்படும் எனவும் இதனை மாவட்டச் செயலாளரும் உறுதிப்படுத்தியுள்ளார் எனவும் எனவே, தகுதியான எவரும் விடுபடவோ, தகுதியற்ற எவரும் உள்நுழைவதற்கோ இதில் வாய்ப்புகள் இல்லை எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
மேலும் குறிப்பாக , மக்களுக்கான உதவித்தொகை இன்னமும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவில்லை எனவும் அவ்வாறு பணம் வைப்பிலிடப்படும் முன்னரே, ‘முறைகேடுகள் நடந்துவிட்டதாக’ அரைகுறைத் தகவல்களைக் கொண்டு பரப்பப்படும் செய்திகள் அடிப்படையற்றவை எனவும் தெரிவுப் பட்டியல்கள் பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னரே கொடுப்பனவுகள் இடம்பெறும் என்பதால், பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்பி அச்சமடையத் தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசாங்கத்தின் பிரதான இலக்கு, அரச இயந்திரத்தில் புரையோடிப்போயிருந்த ஊழலை ஒழிப்பதேயாகும். எனவே, மக்களின் கண்ணீரில் இலாபம் தேடும் ஈனச் செயலுக்கோ அல்லது முறைகேடுகளுக்கோ இனி இடமில்லை எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.














