முதல் மனித ஆழ்கடல் பயணம் மத்ஸ்யா 6000 திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என இந்திய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல் தெரிவித்துள்ளார்.
‘மத்ஸ்யா 6000’ என்பது இந்தியாவின் ‘சமுத்ராயன்’ திட்டத்தின் கீழ் ஆழ்கடல் ஆய்வுகளுக்காக உருவாக்கப்படும் ஒரு மனிதர்களை ஏற்றிச் செல்லும் நீர்மூழ்கிக் கப்பலாகும்.
இது கடலின் 6000 மீட்டர் ஆழம் வரை சென்று, மூன்று நபர்களை ஏற்றிச் சென்று, ஆழ்கடல் கனிமங்கள் மற்றும் உயிரியல் ஆய்வுகளை மேற்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதற்கான இறுதி கட்டத்தில் இருக்கும் அதே நேரத்தில், ஒரு மனித ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பலை அனுப்பும் இந்தியாவின் லட்சியத் திட்டம் ‘மத்ஸ்யா 6000’ முன்னேற்றம் அடைந்துள்ளது எனவும் இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மனித ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பலான ‘மத்ஸ்யா 6000’ திட்டத்தில், 2026ம் ஆண்டு தொடக்கத்தில் 500 மீட்டர் சோதனை நடக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், 2027ம் ஆண்டில் 6000 மீட்டர் என்ற இலக்கை நோக்கி சோதனை நடக்கும் எனவும் மத்ஸ்யா 6000 இந்தியாவை மிக ஆழமான கடல் ஆய்வுத் திறன் கொண்ட சில நாடுகளில் பட்டியலில் இடம்பெற செய்யும் எனவும் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
இந்நிலையில் விண்வெளி திட்டமான ககன்யான் போல, ஆழ்கடல் சோதனையில், ‘மத்ஸ்யா 6000 திட்டம்’ முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.














