லண்டனில் உள்ள ஒரு சிறுவர் பாடசாலையில் (Nursery) சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விவகாரம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் பிரித்தானிய கல்விச் செயலாளரைச் சந்தித்துள்ளனர்.
வடக்கு லண்டனில் உள்ள ‘பிரைட் ஹொரைசன்ஸ்’ (Bright Horizons) சிறுவர் பாடசாலையில் பணியாற்றிய வின்சென்ட் சான் (Vincent Chan) என்ற நபர், அங்கு பயின்ற சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக கடந்த மாதம் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
சுமார் ஏழு ஆண்டுகள் அங்கு பணியாற்றிய அவர், தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளைத் துன்புறுத்தியதுடன், 25,000-க்கும் மேற்பட்ட ஆபாசப் புகைப்படங்களையும் வைத்திருந்தமையும் விசாரணையில் அம்பலமானது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட 52 குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெற்றோர்கள், இன்று கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சனை (Bridget Phillipson) நேரில் சந்தித்து சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அதில் , சிறுவர் பாடசாலைளில் நடக்கும் தவறுகள் குறித்து பெற்றோர்களும் ஊழியர்களும் அச்சமின்றி புகார் அளிக்க ஒரு தனிப்பட்ட வெளிப்படையான அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
ஊழியர்கள் உடலில் அணியும் வீடியோ கேமராக்கள் (Body-worn video) மற்றும் கண்காணிப்பு கேமராக்களை (CCTV) கட்டாயமாக்க வேண்டும்.
பெரிய வகுப்புகளில் குழந்தைகளைக் கவனிக்கும்போது எப்போதும் குறைந்தது இரண்டு பெரியவர்கள் இருக்க வேண்டும் என்ற விதிகளை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் ஆஜராகும் ‘லீ டே’ (Leigh Day) சட்ட நிறுவனம், குறிப்பிட்ட அந்த சிறுவர் பாடசாலை நிர்வாகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
“பணியாளர்கள் மற்றும் மேற்பார்வை குறித்து பெற்றோர்கள் முன்னரே பலமுறை கவலை தெரிவித்தும், நிர்வாகம் அதனைப் பொருட்படுத்தவில்லை” என சட்டத்தரணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதேவேளை, கல்விச் செயலாளர் (Bridget Philipson) பிரிட்ஜெட் பிலிப்சன் ஏற்கனவே இச்சம்பவம் குறித்து ஒரு விரிவான ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சிசிடிவி கேமராக்களைக் கட்டாயமாக்குவது குறித்து அரசு பரிசீலித்து வந்தாலும், அந்தப் பதிவுகள் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் குறித்தும் நிபுணர் குழுவின் ஆலோசனையைப் பெற்று வருவதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.














