அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஈரான் மீதான தாக்குதல் விவகாரத்தில், பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் (House of Commons) சுமார் இரண்டரை மணிநேரம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர் கீர் ஸ்டார்மர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் செயல்கள் சரியானவை அல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார்.
வான்வழியாக குண்டுகளை வீசி ஒரு நாட்டின் ஆட்சியை மாற்றுவதில் (Regime Change) இந்த அரசாங்கத்திற்கு நம்பிக்கை இல்லை என்று அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் பிரதமர் கீர் ஸ்டார்மருக்கும் இடையிலான மிக முக்கியமான மற்றும் பாரிய இராஜதந்திர மோதலாக இது பார்க்கப்படுகிறது.
இதவேளை, முன்னாள் சிரேஷ்ட சட்டத்தரணியான ஸ்டார்மர், சர்வதேச சட்டங்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
ஈராக் போரின் கசப்பான நினைவுகளை நினைவுகூர்ந்த அவர், அமெரிக்காவின் தாக்குதல்கள் சட்டப்பூர்வமானவை என்பதில் தனக்கு உடன்பாடில்லை என்றும் உணர்த்தினார்.
இருப்பினும், வளைகுடா நாடுகளில் உள்ள நட்பு நாடுகளைப் பாதுகாப்பதற்காக, ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு பிரித்தானிய விமானத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி அளித்தது சட்டப்படியானது என்று அவர் நியாயப்படுத்தினார்.
இந்நிலையில் ஸ்டார்மரின் இந்த முடிவுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதன்படி, கன்சர்வேடிவ் மற்றும் ரிஃபார்ம் யூகே கட்சிகள் நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குப் பிரித்தானியா தனது முழுமையான ஆதரவை வெளிப்படையாக வழங்கியிருக்க வேண்டும் என்று கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.














