வேல்ஸ் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கன்சர்வேடிவ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் மே 7-ஆம் திகதி நடைபெறவுள்ள வேல்ஸ் நாடாளுமன்ற (Senedd) தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை கன்சர்வேடிவ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
கட்சியின் தலைவர் டேரன் மில்லர் (Darren Millar), கடினமாக உழைக்கும் மக்களின் கைகளில் அதிக பணம் புழங்குவதை உறுதி செய்வதே தமது இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, அடிப்படை வருமான வரியில் 1 பென்னியை (1p) குறைப்பதன் மூலம் ஒரு சராசரி குடும்பத்திற்கு ஆண்டுக்கு £450 வரை மிச்சப்படுத்த முடியும் என அக்கட்சி உறுதியளித்துள்ளது.
மேலும், வருமான வரி குறைப்புடன், வீடுகளுக்கான முத்திரை வரியை (Stamp Duty) ரத்து செய்தல்,
5 சதவீதத்திற்கும் மேலாக ‘கவுன்சில் வரி’ (Council tax) உயர்த்தப்பட வேண்டுமானால், அதற்கு உள்ளூர் மக்களிடம் வாக்கெடுப்பு (Referendum) நடத்தப்பட வேண்டும், நெரிசலைக் குறைக்க M4 நிவாரணச் சாலையை (M4 Relief Road) உருவாக்குதல் மற்றும் A55, A40 சாலைகளை மேம்படுத்துதல்,
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (STEM) பயிலும் மாணவர்களுக்கு £1,000 கல்விக் கட்டணத் தள்ளுபடி, வேல்ஸில் படித்து அங்கேயே 5 ஆண்டுகள் பணியாற்றும் செவிலியர் மற்றும் மருத்துவர்களுக்குக் கல்விக் கட்டணம் முழுமையாகத் திருப்பித் தரப்படும் போன்ற வாக்குறுதிகளை முன்வைத்துள்ளது.
மேலும், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க ‘வேல்ஸ் மேம்பாட்டு முகமை’ (Welsh Development Agency) மீண்டும் உருவாக்கவும் விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை £100 மில்லியனாக அதிகரிக்கவும், பெரிய அளவிலான காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி பண்ணைகளுக்குத் தடை விதிக்கவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
தற்போதைய கருத்துக்கணிப்புகளில் கன்சர்வேடிவ் கட்சி நான்காவது இடத்திற்குத் தள்ளப்படலாம் எனக் கூறப்படும் சூழலில், இந்தத் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது.
தொழிற் கட்சி அல்லது பிளைட் கம்ரி கட்சிக்கு வாக்களிப்பது “பழைய நிலைமையே நீடிக்க வழிவகுக்கும்” எனச் சாடியுள்ள டேரன் மில்லர், தமது கட்சி மட்டுமே வேல்ஸில் மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய தகுதியான கட்சி எனவும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.













