நுரோச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்தின் இயந்திரங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என நாடாளுமன்ற பொது நிறுவனங்கள் பற்றிய குழு (கோப் குழு – COPE) உறுதிப்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியினால் நுரோச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்தின் இயந்திரங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, கோப் குழுவின் தலைவர் வைத்தியர் நிஷாந்த சமரவீர தலைமையிலான குழுவினர் கடந்த 6-ஆம் திகதி அங்கு நேரடி களஆய்வை மேற்கொண்டனர்.
நிலக்கரி தரையிறக்கம், களஞ்சியப்படுத்தல், மாதிரிப் பரிசோதனை மற்றும் பிரதான கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் என அனைத்து நிலைகளையும் அவர்கள் விரிவாக ஆராய்ந்தனர்.
களஆய்வின் பின்னர் கருத்துத் தெரிவித்த தலைவர் நிஷாந்த சமரவீர, “அண்மைக்காலமாக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியால் மின் நிலைய இயந்திரங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
மின் உற்பத்தி அளவில் சிறிய குறைவு காணப்பட்டாலும், அது நாட்டின் தற்போதைய மின் தேவைக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே, விசாரணைகள் முடியும் வரை பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்” எனத் தெரிவித்தார்.
நிலக்கரி இறக்குமதியின் போது அதன் தரத்தைப் பரிசோதிக்கும் நடைமுறையில் சில குறைபாடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய கோப் குழு,
இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் தரத்தை உறுதிப்படுத்த, நாட்டிற்குள்ளேயே அங்கீகாரம் பெற்ற (Accredited) ஒரு சுயாதீன ஆய்வகத்தை நிறுவுவது அவசியம், தற்போதுள்ள தரப் பரிசோதனை முறைகளை மேலும் நவீனமயமாக்க வேண்டும் போன்ற பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் 35% முதல் 40% வரையான தேவையைப் பூர்த்தி செய்யும் நுரோச்சோலை மின் நிலையம், இலங்கையின் மிகப்பெரிய மற்றும் ஒரேயொரு நிலக்கரி மின் நிலையமாகும்.
இது தேசிய மின் கட்டமைப்பிற்கு சுமார் 900 மெகாவாட் மின்சாரத்தை வழங்குகிறது. தற்போது மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளதாகவும், 845 ஊழியர்களுடன் மின் நிலையம் சீராக இயங்கி வருவதாகவும் நிர்வாகத்தினர் குழுவிடம் தெரிவித்தனர்.
47 ஏக்கர் பரப்பளவிலான நிலக்கரி சேமிப்பு முற்றம் மற்றும் நவீன தரப்பரிசோதனை வசதிகள் அங்கு உள்ள போதிலும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த உள்நாட்டு சுயாதீன பரிசோதனை முறைமையின் அவசியத்தை கோப் குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.















