ஈரான் மீதான அமெரிக்காவின் கோரிக்கைகள் மற்றும் ஜப்பானின் அரசியல் சாசனக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், ஜப்பானியப் பிரதமர் சனே தகாய்ச்சி (Sanae Takaichi) வாஷிங்டனில் மேற்கொள்ளவுள்ள பயணம் ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) ஜப்பானியப் போர்க்கப்பல்களை நிலைநிறுத்துமாறு ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்துள்ள கோரிக்கை, ஜப்பானின் கடுமையான அரசியல் சாசன விதிகளுடன் மோதி நிற்கிறது.
ஜப்பானியத் தற்காப்புப் படைக் கப்பல்களைக் காவல் பணிகளுக்காக அனுப்ப முடியுமே தவிர, ஈரான் போன்ற ஒரு நாட்டுக்கு எதிரான போர் வலயத்திற்குள் அனுப்புவதற்கு அந்நாட்டுச் சட்டம் அனுமதிக்காது.
இதற்கு ‘நாட்டின் இருப்பிற்கு அச்சுறுத்தல்’ (Existential threat) இருப்பதை நிரூபிக்க வேண்டும். ஆனால், இத்தகைய இராணுவ நடவடிக்கைக்கு ஜப்பானிய மக்களிடையே 10 சதவீதத்திற்கும் குறைவான ஆதரவே உள்ளது.
ஜப்பான் தனது கச்சா எண்ணெய் இறக்குமதியில் 95 சதவீதத்தை மத்திய கிழக்கையே நம்பியுள்ளது.
இதில் 70 சதவீதம் ஹார்முஸ் நீரிணை வழியாகவே வருகின்றது.
தற்போதைய போர்ச் சூழலால் எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதுடன், ஜப்பானிய நாணயமான ‘யென்’ (Yen) மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.
இது அந்நாட்டு மக்களிடையே உணவு மற்றும் எரிசக்தி விலையேற்றத்தை ஏற்படுத்தி, ஜப்பான் பிரதமர் தகாய்ச்சியின் செல்வாக்கிற்குச் சவாலாக மாறியுள்ளது.
ஜப்பானில் நிலைகொண்டுள்ள 50,000 அமெரிக்கப் படைகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருகின்றார்.
ஒருவேளை ட்ரம்பின் கோரிக்கையை ஜப்பான் நிராகரித்தால், அது அமெரிக்கா உடனான உறவில் விரிசலை ஏற்படுத்தி, சீனாவுக்கு எதிரான ஜப்பானின் பாதுகாப்பு அரணைப் பலவீனப்படுத்தக்கூடும்.
அதேவேளை, இக்கோரிக்கையை ஏற்றால் அது ஜப்பானின் போருக்குப் பிந்தைய ‘அமைதிவாத’ (Post-war security policy) கொள்கையை முழுமையாக மாற்றியமைப்பதாக அமையும்.
1991 வளைகுடாப் போரின்போது நிதியுதவி மட்டும் வழங்கிய ஜப்பான், பின்னர் சோமாலியக் கடற்கொள்ளையர்களுக்கு எதிரான பணிகளில் மட்டுமே ஈடுபட்டது.
நேரடி போர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து வந்த ஜப்பான், இப்போது அமெரிக்காவின் அழுத்தத்தால் தனது வரலாற்றில் மிக முக்கியமான ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.















