யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ள நிலையில், கடற்படையினர் இது விடயத்தில் மெத்தனப் போக்குடன் செயற்படுவதாக உள்ளூர் மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் நாகர்கோவில் கிழக்கு திசையில், கரையில் இருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
இந்தியப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் ‘குல்லா’ ரகப் படகுகளில் வந்த அவர்கள், இலங்கையில் தடைசெய்யப்பட்ட ‘லாம்பு’ (Light Course) மீன்பிடி முறையில் ஈடுபட்டதை உள்ளூர் மீனவர்கள் நேரில் கண்டுள்ளனர்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களின் செயற்பாடுகளை உள்ளூர் மீனவர்கள் தமது கையடக்கத் தொலைபேசிகள் மூலம் காணொளியாகப் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து வடமராட்சி மீனவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இலங்கையில் தடைசெய்யப்பட்ட ‘லாம்பு’ மீன்பிடி முறையைப் பயன்படுத்துவதால் கடல் வளங்கள் முற்றாக அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் இந்திய மீனவர்களின் வருகையினால் உள்ளூர் மீனவர்களின் வலைகள் மற்றும் உபகரணங்கள் தொடர்ச்சியாகச் சேதமாக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
எல்லை தாண்டி வரும் அந்நிய மீனவர்கள் மீது சட்டக் கெடுபிடிகளைப் பிரயோகித்து, கடல் எல்லையையும் வளத்தையும் பாதுகாக்கக் கடற்படை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமராட்சி கிழக்கு மீனவ சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.













