வாரியப்பொல – நாரம்மல வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ பகுதியில் அமைந்துள்ள கொலமுணுஓயா பாலத்திலிருந்து லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை 1.00 மணி முதல் 2.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கட்டுப்பொத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மீரிகம, பல்லேவெல பகுதியைச் சேர்ந்த 63 மற்றும் 42 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆனமடுவ பகுதியிலிருந்து செங்கற்களை ஏற்றிக்கொண்டு மீரிகம நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்துப் பொலிஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில், அதிகாலை வேளையில் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே லொறி கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து கவிழக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
தற்போது உயிரிழந்தவர்களின் சடலங்கள் கட்டுப்பொத்த பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கட்டுப்பொத்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.












