இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று (14) இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், குளத்திலிருந்து ஆணொருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.
வெல்லவாய, நெட்டொலகம பகுதியில் நேற்று மாலை பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கள்ளக்காதலனுக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.
தாக்குதலின் பின்னர் சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், வெல்லவாய பொலிஸார் அவரைத் தேடி வருகின்றனர்.
இதேவேளை, பயாகல, விகாரகந்த பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று சித்திரை புத்தாண்டுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதுபான விருந்தின் போது பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, அங்கிருந்த ஒருவர் தடியால் தாக்கப்பட்டதில் தலையில் பலத்த காயமடைந்து களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 46 வயதுடைய அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
இக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பயாகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, அநுராதபுரம் நுவரவெவ குளத்திலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் ஆள் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் பதிவாகியுள்ள இச்சம்பவங்கள் அந்தந்தப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.












