அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோருக்கு இடையிலான நீண்டகால நட்பு விரிசலடைந்துள்ள நிலையில், ட்ரம்ப் மெலோனியை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
ஐரோப்பாவில் தனக்கு மிகவும் நெருக்கமான கூட்டாளியாகக் கருதப்பட்ட இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
ஈரான் மீதான போரில் அமெரிக்காவுடன் இணைய இத்தாலி மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில், “மெலோனிக்குத் துணிச்சல் இருப்பதாக நான் நினைத்தேன், ஆனால் நான் தவறாகக் கணித்துவிட்டேன்,” என்று ட்ரம்ப் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இத்தாலிய நாளிதழான ‘Corriere della Sera’ (கொரியர் டெல்லா செரா) இற்கு வழங்கிய நேர்காணலில் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் போப்பாண்டவர் லியோ XIV மீதான ட்ரம்ப்பின் விமர்சனங்களை மெலோனி “ஏற்றுக்கொள்ள முடியாதது” எனக் கண்டித்திருந்தார்.
இதற்குப் பதிலடியாக, மெலோனியின் அணுகுமுறைதான் ஏற்றுக்கொள்ள முடியாதது என ட்ரம்ப் சாடியுள்ளார்.
இந்நிலையில் ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பதை மெலோனி பொருட்படுத்துவதில்லை எனவும் வாய்ப்பு கிடைத்தால் ஈரான் இரண்டு நிமிடங்களில் இத்தாலியை அழித்துவிடும் எனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, நேட்டோ (NATO) அமைப்பை “காகிதப் புலி” என வர்ணித்த ட்ரம்ப், தங்களுக்குத் தேவையான எரிசக்தி கிடைக்கும் ஹோர்முஸ் நீரிணைக்காகப் போராட ஐரோப்பா முன்வருவதில்லை எனக் குற்றம் சாட்டினார்.
ட்ரம்ப்பின் இந்தக் கருத்துகளுக்கு இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தாஜானி தனது ‘X’ தளத்தில் பதிலளித்துள்ளார்.
அதில், “மேற்கத்திய நாடுகளின் ஒற்றுமை என்பது பரஸ்பர விசுவாசம், மரியாதை மற்றும் நேர்மையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும் எனவும் மெலோனி எதற்கும் அஞ்சாமல் தனது கருத்தைக் கூறும் துணிச்சல் மிக்க பெண், எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், இஸ்ரேலுடனான இராணுவ உபகரணப் பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி தொடர்பான பாதுகாப்பு ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இத்தாலி அறிவித்துள்ளது.
லெபனானில் உள்ள இத்தாலிய அமைதிப்படை வீரர்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் புகாரைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்தோர் பிரச்சினை ஐரோப்பாவைக் கொன்று வருவதாகவும், மெலோனி பழைய மனிதராகத் தெரியவில்லை என்றும் ட்ரம்ப் கூறியிருப்பது, சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
















