சத்தீஸ்கரில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில், 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கரின் சக்தி மாவட்டத்தில் உள்ள சிங்கித்தராய் கிராமத்தில், ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அனல் மின் உற்பத்தி நிலையம் உள்ளது.
இங்கு நேற்று பிற்பகலில், 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.
அப்போது அங்கிருந்த பாய்லர் குழாய் திடீரென வெடித்து சிதறியது.
இதில், மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் ஏழு பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததுடன் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களுக்கு ராய்காட் மாவட்ட மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கொதிகலன் வெடித்த பகுதியில் மேலும் சில தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
அங்கு, பொலிஸாருடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும், காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.













