இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டைச் சட்டப்பூர்வமாகத் தடை செய்ய பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், புதிய சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவரவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் பாடசாலைகளில் அலைபேசி பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நடைமுறைக்குச் சட்டப்பூர்வ அந்தஸ்து கிடைக்கவுள்ளது.
கல்வி அமைச்சர் பாரனஸ் ஜாக்குவி ஸ்மித் (Baroness Jacqui Smith) பிரபுக்கள் சபையில் (House of Lords) கருத்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாடசாலை நேரத்தின் போது மாணவர்கள் அலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஏற்கனவே கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் அறிவுறுத்தியிருந்தார்.
தற்போது அந்த வழிகாட்டல்கள் சட்டமாக மாற்றப்படவுள்ளன.
ஆறாம் படிவ (Sixth form) மாணவர்கள், விடுதிப் பாடசாலைகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் மற்றும் மருத்துவத் தேவைக்காக அலைபேசி பயன்படுத்துவோருக்குச் சில விதிவிலக்குகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இந்த திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் பாராட்டியுள்ளன.
சமூக வலைதளங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, பல தசாப்தங்களுக்குப் பிறகு கொண்டுவரப்படும் மிக முக்கியமான சிறுவர் பாதுகாப்புச் சட்டமாகக் கருதப்படுகிறது.














