பிரித்தானிய அரசாங்கம் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்கும் நோக்கில், எரிசக்தி விலையிடல் முறையில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது.
சர்வதேச மோதல்களால் ஏற்படும் எரிபொருள் விலை அதிர்ச்சிகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில், மின்சார விலையை எரிவாயு (Gas) விலையிலிருந்து தனிமைப்படுத்தும் புதிய திட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
தற்போதைய நடைமுறைப்படி, மின்சாரச் சந்தையில் மொத்த விற்பனை விலையானது, தேவையைப் பூர்த்தி செய்ய இறுதியாகப் பயன்படுத்தப்படும் எரிசக்தி அலகைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.
பிரித்தானியாவில் பெரும்பாலும் எரிவாயு மூலமே இந்த இறுதித் தேவை பூர்த்தி செய்யப்படுவதால், சர்வதேசச் சந்தையில் எரிவாயு விலை உயரும்போது மின்சாரக் கட்டணமும் தானாகவே உயர்கிறது.
காற்றாலை மற்றும் சூரியசக்தி மூலம் மலிவாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும், அதன் பயன் மக்களுக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை.
இதேவேளை, பழைய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி நிலையங்களை ‘மாறும் விலை’ (Variable price) முறையிலிருந்து ‘நிலையான விலை’ (Fixed-price) ஒப்பந்தங்களுக்கு மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த மாற்றத்தை அடுத்த ஓராண்டிற்குள் நடைமுறைப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது நாட்டின் மின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ள பழைய தூய எரிசக்தி திட்டங்களுக்குப் பொருந்தும்.
இதன் மூலம் புதைபடிவ எரிபொருட்களின் (Fossil fuels) விலை திடீரென உயர்ந்தாலும், மின்சாரக் கட்டணங்கள் பாதிக்கப்படாது.
இருப்பினும், தொழிலாளர் கட்சியின் இந்த இலக்குகள் மின்சாரக் கட்டணங்களை மேலும் உயர்த்தும் என கன்சர்வேடிவ் கட்சி விமர்சித்துள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம் சேமிக்கப்படும் தொகையின் துல்லியமான விபரங்களை அரசாங்கம் வெளியிடவில்லை என்றாலும், அது “குறிப்பிடத்தக்கதாக” இருக்கும் என நம்பப்படுகிறது.














