கஹவத்தை நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாகவும் அம்மக்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் குறித்தும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடனான விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (27) பத்தரமுல்லயில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது பெருந்தோட்ட பகுதிகளில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்ற அடிப்படையில் அடியாட்களை வைத்திருப்பது சட்டத்திற்கு முரணானது என்றும் இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதியமைச்சர் பிரதீப் ஆகியோரால் உத்தரவிடப்பட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆலோசனையும் வழங்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்திய அமைச்சர் சமந்த வித்யாரத்ன, குறிப்பிட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியைத் தொடர்புகொண்டு உடனடியாக இந்த பாதுகாப்பு குழுவினர் தொடர்பாக நிருவாகம் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் பற்றி அறிக்கை சமர்ப்பிக்கும் படி அறிவுறுத்தியதுடன் இவ்வாறு மக்களுக்கு அச்சுறுத்தலாக செயற்படுவதை உடனடியாக நிறுத்தும் படியும் அறிவுறுத்தி இருந்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் காணியை வழங்குவது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் படியும் அவ் அதிகாரிக்கு அமைச்சர் மேலும் அறிவுறுத்தினார்.
இக்கலந்துரையாடலின்போது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் குணதாச அமரசிங்க, தோட்ட முகாமைத்துவ கண்காணிப்பு பிரிவின் (P.M.M.D) பணிப்பாளர், அமைச்சின் பிரதான அதிகாரிகள் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
அதேபோல் பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பு செயலாளரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டனர்.














