வட அயர்லாந்தில் உள்ள மருத்துவமனை மருத்துவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வுப் போதாது எனக் கூறி, அதற்கு எதிராக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
சுயாதீன ஊதியக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட 3.5 சதவீத ஊதிய உயர்வை மருத்துவர்களின் சங்கத் தலைவர்கள் நிராகரித்ததைத் தொடர்ந்து, பிரித்தானிய மருத்துவ சங்கம் (BMA) தனது உறுப்பினர்களிடையே கடந்த நான்கு வாரங்களாக இந்த வாக்கெடுப்பை நடத்தியிருந்தது.
இந்த வாக்கெடுப்பின் முடிவுகளின்படி, மருத்துவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் ஜூன் 25 மற்றும் ஜூன் 29 ஆகிய இரண்டு தினங்களில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டங்கள் (Walk outs) நடத்தப்படவுள்ளன.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக முன்னரே திட்டமிடப்பட்ட அறுவைசிகிச்சைகள் மற்றும் மருத்துவ நடைமுறைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படும்.
எனினும், அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளின் செயல்பாடுகளில் எவ்வித பாதிப்பும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


















