லெபனான் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையையும் மீறி, இஸ்ரேல் இராணுவம் லெபனானின் முக்கிய நகரான டயர் (Tyre) மீது நடத்திய குண்டுவீச்சில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரான ‘டயர்’ (Tyre) நகர மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேலிய இராணுவம் கட்டாய உத்தரவு பிறப்பித்த சில நிமிடங்களிலேயே அங்குள்ள மக்கள் குடியிருப்புப் பகுதி மீது பயங்கர வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
டயர் நகரின் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பொதுக் குடியிருப்புப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக லெபனான் சிவில் பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க மையத்திற்கு மிக அருகில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், பல மருத்துவப் பணியாளர்களும் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான ஆபத்தான இராணுவ மோதல்களுக்குப் பின்னர் , ஈரானுடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான “இறுதி கட்டத்தில்” (Final throes) தான் இருப்பதாக ஜனாதியாதி டிரம்ப் அறிவித்துள்ளார்.
இன்னும் சில நாட்களில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.














