இங்கிலாந்தின் Cumbria பகுதியில் செயல்பட்ட தேவாலய நிர்வாகத்திலான தாய்-குழந்தைகள் இல்லம் தொடர்பாக புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. தத்தெடுப்பதற்கு தகுதியற்றவர்கள் எனக் கருதப்பட்ட நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு போதிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படாமல் உயிரிழக்க அனுமதிக்கப்பட்டதாக ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
முன்னணி கல்வியாளர் ஒருவர் ஆய்வு செய்த வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மையை வெளிக்கொணர பல ஆண்டுகளாக போராடி வந்த குடும்பத்தினரும் இந்த கண்டுபிடிப்புகளை வரவேற்றுள்ளனர்.
இந்த விவகாரத்தில் பேசப்பட்டவர்களில் ஒருவர் ஸ்டீவ் ஹின்ட்லி. அவரது மனைவி ஜூடித், இளமைக் காலத்தில் திருமணமாகாமல் கர்ப்பமானதால் சமூக அவமானத்தின் காரணமாக கெண்டல் பகுதியில் உள்ள தாய்மார் இல்லத்துக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. ஜூடித், பாலியல் வன்முறைக்குப் பிறகு கர்ப்பமானதாக தெரிவித்திருந்தார்.
1964 ஆம் ஆண்டு ஜனவரியில், ஜூடித்துக்கு பிறந்த மகன் ஸ்டீபன், முதுகுத் தண்டு வளர்ச்சி குறைபாடு மற்றும் மூளையில் திரவம் தேங்கும் நோயுடன் பிறந்தார். குழந்தைக்கு உடனடி மருத்துவ உதவி வழங்குமாறு ஜூடித் பலமுறை கோரியிருந்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதன் விளைவாக, 11 வாரங்களுக்குப் பிறகு குழந்தை உயிரிழந்தது.
அந்த காலகட்டத்தில் திருமணமாகாத பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டதாகவும், பல குழந்தைகள் கட்டாய தத்தெடுப்புக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த புதிய தகவல்கள் தொடர்பாக மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.















