மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அனுமன் கோயில் வளாகத்தின் புதிய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம் அனுமன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம் என்பதால், இக்கோயிலிலும் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் வருகை தந்திருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இக்கோயிலின் கருவறைக்கு முன்பாக பக்தர்களின் வசதிக்காகப் புதிய வளாகம் ஒன்று அமைக்கப்பட்டு, அதற்கான கான்கிரீட் மேற்கூரை அண்மையில்தான் போடப்பட்டிருந்தது.
நேற்றைய தினம் சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்த பக்தர்களில் சிலர், புதிய கட்டுமானம் நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்புச் சாரங்களுக்கு இடையே நின்று கொண்டிருந்தனர்.
இதன்போது எதிர்பாராத விதமாக இரும்புச் சாரங்கள் மொத்தமாகச் சரிந்து விழுந்தன.
அதன் தாக்கத்தினால், புதிதாகப் போடப்பட்டிருந்த பிரம்மாண்ட கான்கிரீட் மேற்கூரையும் இடிந்து பக்தர்கள் மீது விழுந்து நொறுங்கியது.
மேற்கூரை இடிந்து விழுந்ததில் அங்கிருந்த பக்தர்கள் அனைவரும் கான்கிரீட் இடிபாடுகள் மற்றும் இரும்பு கம்பிகளுக்கு இடையே சிக்கி காயமடைந்தனர்.
படுகாயமடைந்த 30 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்போதைய நிலவரப்படி, காயமடைந்தவர்களில் 6 பக்தர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

















