மும்பை — அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் தாமதம் அடைந்ததற்கு, இந்திய அரசு தரப்பே முழு காரணம்’ என, ஜப்பானின் முன்னாள் நீதித்துறை அமைச்சர் ஹிடேகி மக்கி ஹாரா குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆனால், பணிகள் திட்டமிட்டபடி நடந்து வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து குஜராத்தின் ஆமதாபாத் வரை, நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம், ஜப்பானின், ‘ஷின்கன்சென்’ அதிவேக ரயில் தொழில் நுட்பத்தில் செயல்படுத்தப் பட்டு வருகிறது.
மொத்தம், 508 கி.மீ., நீளத்தில் இரு நகரங்களை இணைக்கும் இந்த திட்டத்துக்கு, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை நிதியுதவி வழங்கி வருகிறது.
இந்த வழித்தடத்தின் முதல் கட்டமான குஜராத்தின் சூரத் — பிலிமோரா இடையே, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் பயணியர் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், டில்லியில் வசித்து வரும் ஜப்பானிய ரயில்வே பொறியாளர் இசாவோ சுஜிமுரா மும்பை — ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டம், ஜப்பான் உருவாக்கிய அசல் ஷின்கன்சென் மாதிரியில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக கட்டுரை ஒன்றை எழுதினார்.

















