முறிந்துபோன இடைக்காலப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீட்டெடுப்பதற்காக பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர முயற்சிகளின் முக்கியத்துவத்தை, மத்திய கிழக்கு முழுவதும் நடைபெறும் தாக்குதல்கள் மங்கச் செய்துள்ளன.
இந்த நிலையில், ஈரான் மீதான தாக்குதல்களின் 11 ஆவது இரவை புதன்கிழமை (22) அதிகாலையில் நிறைவு செய்ததாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானின் இராணுவச் செயல்பாட்டு மையங்கள், கடல்சார் திறன்கள், விமானக் கொட்டகைகள், ஆளில்லா விமானச் சேமிப்பு நிலையங்கள் மற்றும் இராணுவத் தளவாடக் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை இந்தத் தாக்குதல்கள் குறிவைத்ததாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்தது.
ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடிய ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதே இந்தத் தாக்குதல்களின் நோக்கம் என்று சென்ட்காம் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த நீரிணை வழியாகச் சென்ற 30-க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த அநாவசியமான தாக்குதல்கள் நூற்றுக்கணக்கான அப்பாவி மாலுமிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததுடன், கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரத்தையும் சீர்குலைத்துள்ளதாகவும் சென்ட்காம் சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மைய தாக்குதல்களுக்கு முன்னதாக, இராஜதந்திர உறவுகளைப் புதுப்பிக்கும் முயற்சியாக, இம்முரண்பாட்டில் முக்கிய மத்தியஸ்தராகத் திகழும் பாகிஸ்தானுக்கு ஈரானிய உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மொமேனி பயணம் மேற்கொண்டார்.
இருப்பினும், உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு மிக முக்கியமான நீர்வழியான ஹார்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாட்டிற்கான மோதலாக அண்மைக்காலத்தில் மாறியுள்ள இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர, என்ன புதிய ஏற்பாடு எட்டப்படக்கூடும் என்பது தெளிவாக இல்லை.
செவ்வாய்க்கிழமை (21) அன்று ஓவல் அலுவலகத்திலிருந்து பேசிய ட்ரம்ப், சாத்தியமான பேச்சுவார்த்தைகள் குறித்து அதிருப்தியான ஒரு கண்ணோட்டத்தை வெளிப்படுத்தினார்.
அத்துடன், யுரேனியம் செறிவூட்டப்படும் ஈரானின் முக்கிய தளங்களில் ஒன்றுக்கு அருகிலுள்ள பகுதியை அமெரிக்கப் படைகள் விரைவில் குறிவைக்கக்கூடும் என்பதையும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தும் பேச்சுவார்த்தைகளும் பெருமளவில் முடங்கியுள்ள நிலையில், அப்பிராந்தியத்தில் இலட்சக்கணக்கான மக்கள் சார்ந்திருக்கும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளைக் குறிவைப்பதன் மூலம் சாதகமான நிலையை அடைய இரு தரப்பினரும் முயன்று வருகின்றனர்.
போருக்கு முன்பு உலகின் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு கடத்தப்பட்ட இந்த நீரிணை மீதான ஈரானின் பிடியை, அமெரிக்காவின் தொடர்ச்சியான தாக்குதல்களாலும் தளர்த்த முடியவில்லை.
அமெரிக்கா தனது வான்வழித் தாக்குதல்களை புதன்கிழமையும் தொடர்ந்தது, அதே நேரத்தில் ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்புகள் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் செயல்படத் தொடங்கின.
புஷேர், கிழக்கு அசர்பைஜான், ஹமதான், ஹோர்மோஸ்கான், குசெஸ்தான் மற்றும் சிஸ்தான், பலுசிஸ்தான் மாகாணங்களில் வெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரானின் அரசு நடத்தும் IRNA செய்தி நிறுவனம் தெரிவித்தது.
செவ்வாயன்று நீரிணையில் ஒரு எண்ணெய்க் கப்பலை ஈரான் தாக்கியதைத் தொடர்ந்து இது நிகழ்ந்தது.
இந்தத் தாக்குதலில் கப்பல் ஊழியர்கள் கப்பலைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதான தாக்குதல்களையும் ஈரான் தொடர்ந்தது. பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் குவைத் மீதும் ஈரான் தாக்குதல்களை நடத்தியது.
இந்த தாக்குதல்கள் எரிசக்தி விலைகளையும் கடுமையாக உயர்த்தியது.
புதன்கிழமையன்று, சர்வதேச மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 92 டொலருக்கும் அதிகமாக வர்த்தகமானதுடன், அமெரிக்காவில் சாதாரண பெட்ரோலின் விலை ஒரு கேலனுக்கு சராசரியாக 4 டொலராக உயர்ந்தது.












