பிள்ளைகளைத் தேடும் போராட்டத்தை மரணச் சான்றிதழ் அல்லது நிதியுதவி மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டாம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்கள்,
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (Office on Missing Persons – OMP), காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகள் தொடர்பான நடவடிக்கைகளுக்காக குடும்பங்களை அழைத்து, ஆவணங்கள், சாட்சிகள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைக் கொண்டு வருமாறு கோருவது குறித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளான நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.
மேலும், கிராம சேவகர் (GS) அதிகாரிகள் மூலம் குடும்பங்களைத் தொடர்புகொண்டு OMP நடவடிக்கைகளில் கலந்துகொள்ள அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் சில குடும்பங்கள் அச்சுறுத்தப்பட்டதாக அல்லது கட்டாயப்படுத்தப்பட்டதாக தாய்மார்கள் தெரிவிக்கின்றனர்.
எந்த கிராம சேவகர் அதிகாரியோ அல்லது வேறு அரச அதிகாரியோ காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை OMP கூட்டத்திற்குச் செல்லவோ, மரணச் சான்றிதழை ஏற்றுக்கொள்ளவோ, வங்கிக் கணக்கு விவரங்களை வழங்கவோ அச்சுறுத்தவோ, அழுத்தம் கொடுக்கவோ, கட்டாயப்படுத்தவோ கூடாது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் எங்கே உள்ளனர் என்பவை நம்பகமான சுயாதீன விசாரணையின் மூலம் நிரூபிக்கப்படாத நிலையில், அவர்களின் குடும்பங்கள் மரணச் சான்றிதழை ஏற்றுக்கொள்ள அழுத்தப்படக்கூடாது.
வங்கிக் கணக்கு விவரங்களைக் கோருவதும், நிதியுதவி வழங்குவதும் மரணச் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையுடன் இணைக்கப்பட்டால் அது மிகவும் கவலைக்குரியது.
குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி, அவர்களின் பிள்ளைகள் இறந்துவிட்டதாக ஏற்றுக்கொள்வதற்கான பணமாகவோ, அவர்களைத் தேடுவதை நிறுத்துவதற்கான நிபந்தனையாகவோ, உண்மை மற்றும் நீதிக்கான போராட்டத்தை முடிப்பதற்கான வழியாகவோ இருக்கக்கூடாது.
சர்வதேச சமூகத்தால் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவியின் நோக்கம், உண்மை மற்றும் நீதி கிடைக்கும் வரை தாய்மார்கள் வாழ்வாதார ரீதியாகத் தங்களைத் தாங்கிக்கொள்ள உதவுவதாகவே இருக்க வேண்டும்.அந்த உதவி தீர்க்கப்படாத காணாமல் ஆக்கப்பட்டோர் வழக்குகளை நிர்வாக ரீதியாக மூடுவதற்கான கருவியாக மாற்றப்படக்கூடாது.
எனவே, மனிதாபிமான நிதியுதவியையும் மரணச் சான்றிதழ் வழங்கும் அல்லது காணாமல் ஆக்கப்பட்டோர் கோப்புகளை மூடும் நடவடிக்கைகளையும் முற்றிலும் தனித்தனியாக வைத்திருக்க வேண்டும் என்று OMP மற்றும் இலங்கை அரசாங்கத்திடம் நாங்கள் கோருகின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் கிடைக்கும் வரை அவர்களின் வாழ்வாதாரத்தை ஆதரிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதை ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் உறுதிப்படுத்த வேண்டும்.
பல ஆண்டுகளாக இந்தத் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியவே காத்திருக்கின்றனர். ஒரு வங்கிக் கணக்கு, ஒரு பணப்பரிமாற்றம் அல்லது ஒரு மரணச் சான்றிதழ் மூலம் அவர்களின் போராட்டத்தை முடித்துவிட முடியாது. என்றனர்














