ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி முன்னெடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (27) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்றைய விசாரணையின்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, இந்த வழக்கின் முதலாவது சாட்சிக்கு சாட்சியமளிப்பதற்காக மார்ச் மாதம் 24ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்து அழைப்பாணை பிறப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, சாட்சி விசாரணைக்கான அடுத்த திகதி மார்ச் 24 என நிர்ணயிக்கப்பட்டது.
2014ஆம் ஆண்டு மே தினப் பேரணியில் கலந்துகொண்ட தனது ஆதரவாளர்களுக்கு மதிய உணவு வழங்குமாறு பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் தனக்குச் சொந்தமான 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணத்தை விடுவித்துள்ளது.
இதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக , லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பிரியங்கர ஜயரத்னவுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.













