ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலை கண்டித்து அமெரிக்கா முழுவதும் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் முழுவதும் நடத்திய இராணுவ தாக்குதல் நடவடிக்கையில் ஈரானின் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமெனி மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட பொதுமக்கள் பலர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர்.
அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் அமெரிக்க இராணுவ தளங்கள் உள்ள இடங்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தியது. துபாய், டோஹா கட்டார், பஹ்ரைன், குவைத் முதலான மத்திய கிழக்கில் பல்வேறு இடங்களிலும் ஈரானிய தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய திடீர் தாக்குதலுக்கு காரணமாக அமெரிக்காவை கண்டித்து, அங்குள்ள பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் உள்ள பாலஸ்தீன இளைஞர் இயக்கம், ஜனநாயக சோசலிசவாதிகள், கோட் பிங்க் (Code pink) பெண்கள் குழுவினர், மக்கள் மன்றத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழுக்கள் இணைந்து இந்த வார இறுதி முழுவதும் பல போராட்டங்களில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.















