கிளாஸ்கோ நகரில் அமைந்துள்ள பிரிட்டனின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான குயின் எலிசபெத்(QEUH )பல்கலைக்கழக மருத்துவமனை மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இந்த மருத்துவமனையின் புற்றுநோய் வார்டில் அசுத்தமான நீர் மற்றும் பூஞ்சை பரவல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு சிகிச்சை பெற்ற சில நோயாளிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்த விவகாரம் தொடர்பாக தேசிய சுகாதார சேவை (NHS) அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக சில நோயாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் (Clinical Investigations) மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஆனால், எத்தனை நோயாளிகள் பாதிக்கப்பட்டனர், அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன, யாராவது உயிரிழந்தார்களா என்பது போன்ற விவரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
சுமார் £1 பில்லியன் செலவில் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை, ஆரம்ப காலத்திலிருந்தே பல்வேறு கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் மருத்துவமனையின் மாசுபட்ட நீர் மற்றும் காற்றோட்ட பிரச்சினைகள் காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேலும், மருத்துவமனை சூழல் காரணமாக ஏற்பட்டதாகக் கூறப்படும் மரணங்கள் தொடர்பில் நிறுவன ரீதியிலான கொ*லை (Corporate Homicide) விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது.
இதனிடையேஅண்மையில் மருத்துவமனையில் புதிய சுற்றுச்சூழல் அபாயங்கள் இருப்பதாக செய்திகள் வெளியான சில நாட்களிலேயே இந்த அசுத்தமான நீர் தொடர்பான விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மக்களின் உயிரைக் காக்க வேண்டிய மருத்துவமனையே சுகாதாரமற்ற சூழலால் நோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிவருவது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை தேவை என பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.















