சட்டவிரோத மதுபானங்களுடன் மூன்று சந்தேக நபர்களை அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அம்பாறை இங்கினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லனோய மற்றும் கெத்சிறிகம கிராமங்களில் இன்று நடத்தப்பட்ட சோதனைகளின் போது 41,500 மில்லிலிட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தப் பகுதிகளில் ஒரு குழு சிறிது காலமாக சட்டவிரோத மதுபானங்களை விற்பனை செய்து வருவதாகவும்இ இது இந்த கிராமங்களில் பொதுமக்களுக்கு பெரும் தொந்தரவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கிராமங்களில் உள்ள இளைஞர்களும் இந்த சட்டவிரோத மதுபானத்தை உட்கொள்ள தூண்டப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவினர் இந்த சோதனைகளை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் சட்டவிரோத மதுபானமும் சட்ட நடவடிக்கைகளுக்காக இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் அறிவுறுத்தலின் பேரில்,அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் மேற்பார்வையில், அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமாராச்சி மற்றும் அம்பாறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி சந்திரசேகர சமரசிங்க, அம்பாறை பிரிவு ஊழல் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
















