சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் (PMCU)) சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கும், அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவொன்று உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளது.
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். பிரிமியா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு, உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, மருத்துவ நிலையத்தின் உட்கட்டுமான அபிவிருத்திகளை விரிவாக்கம் செய்வது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இதன்போது, நிலையத்திற்கு அருகாமையில் உள்ள காணியினை நாடாளுமன்ற உறுப்பினர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
தற்போதைய இடவசதிகளை விரிவுபடுத்துவதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு இன்னும் மேம்பட்ட சுகாதார சேவைகளை வழங்க முடியும் என , இதன்போது சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

















