எதிர்வரும் 11ஆம் திகதி வரை பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய,கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பத் திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அந்த நாட்டின் முக்கிய நிறுவனங்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்திவருகின்றார்.
இந்நிலையில் நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டின் கல்விச் செயலாளர் Sonny Angara வுடன் பிரதமர் கலந்துரையாடியுள்ளார்.
கல்விக் கொள்கை, ஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டச் சீர்திருத்தங்கள் மற்றும் டிஜிட்டல்மய கற்றல் முன்முயற்சிகள் ஆகியவற்றில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது உட்பட, கல்வித்துறையில் இருதரப்பு ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதற்கும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
பாடத்திட்டங்களை நவீனப்படுத்துதல் மற்றும் கற்றலில் தொழில்நுட்பத்தை உள்வாங்குதல் போன்ற இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பாக பிரதமர், விளக்கமளித்தார்.
அதனைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் உயர்கல்வி அதிகாரசபையின் தலைவர் Shirley C.Agrupis தலைமையிலான தூதுக்குழுவினரைப் பிரதமர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஆராய்ச்சி ஒத்துழைப்பு, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கல்விசார் கூட்டுறவு, மாணவர் மற்றும் விரிவுரையாளர் பரிமாற்றம் மற்றும் தர உறுதிப்பாட்டுக் கட்டமைப்புகளைப் பலப்படுத்துதல் ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்தி, இரு நாடுகளினதும் உயர்கல்வி மேம்பாடு தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
பேண்தகு அபிவிருத்தி மற்றும் மனிதவள அபிவிருத்திக்கு ஆதரவாகக் கல்வி, திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இலங்கை, பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளினதும், சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களினதும் அர்ப்பணிப்பை இந்த சந்திப்புகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.














