மத்திய கிழக்கு முழுவதும் எண்ணெய் மற்றும் போக்குவரத்து வசதிகள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்திய ஈரான், ஈராக் கடலில் இரண்டு டேங்கர்களை தீ வைத்து எரித்தது.
அமெரிக்கா ஏற்கனவே போரில் வெற்றி பெற்றுவிட்டது என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கூற்றை மீறி, பீப்பாய்க்கு $200க்கு எண்ணெய் வாங்க உலகம் தயாராக இருக்க வேண்டும் என்றும் தெஹ்ரான் எச்சரித்தது.
சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு வான்வழித் தாக்குதல்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்தப் போர், இதுவரை சுமார் 2,000 பேரைக் கொன்றுள்ளதுடன், உலகளாவிய எரிசக்தி சந்தைகளையும் போக்குவரத்தையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த மோதல் மத்திய கிழக்கு முழுவதும் பரவியுள்ளதுடன், 1970 களுக்குப் பின்னர் ஏற்பட்ட மோசமான எரிபொருள் அதிர்ச்சிகளில் ஒன்றைத் தணிக்க மூலோபாய எண்ணெய் இருப்புக்களை சாதனை அளவில் வெளியிடுவதற்கான திட்டங்களைத் தூண்டியுள்ளது.
இதனிடைடேய அண்மைய மோதலினால் 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள்/குழந்தைகள் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்கள் நிதியம் (UNICEF), தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நவம்பர் இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக கென்டக்கியில் புதன்கிழமை (12) நடந்த பிரச்சார பாணி பேரணியில் டொனால் ட்ரம்ப், அமெரிக்கா போரில் வெற்றி பெற்றதாக கூறினார்.
வாரத்தின் தொடக்கத்தில் பீப்பாய்க்கு சுமார் $120 ஆக உயர்ந்து பின்னர் $90 ஆக நிலைபெற்ற எண்ணெய் விலை, புதன்கிழமை கிட்டத்தட்ட 5% உயர்ந்தது.
வால் ஸ்ட்ரீட்டின் முக்கிய பங்கு குறியீடுகள் சரிந்தன, ஆசியாவில் பங்குகளும் வீழ்ச்சி கண்டன.
இவ்வாறான நிலையில் ஈரான் நீண்டகால பொருளாதார அதிர்ச்சியை ஏற்படுத்த விரும்புவதாக தெளிவுபடுத்தியுள்ளது.
ஈரானின் இராணுவ கட்டளையின் செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை அமெரிக்காவை நோக்கி, பீப்பாய்க்கு $200க்கு எண்ணெய் வாங்க உலகம் தயாராக இருக்க வேண்டும், ஏனெனில் எண்ணெய் விலை எமது பிராந்திய பாதுகாப்பைப் பொறுத்தது, அதை நீங்கள் நிலைகுலைத்துவிட்டீர்கள் என்று கூறினார்.
ஈரானிய வெடிபொருட்கள் நிறைந்த படகுகள் ஈராக்கிய நீரில் இரண்டு எரிபொருள் டேங்கர்களைத் தாக்கியதாகத் தெரிகிறது.
வளைகுடா நீரில் மூன்று வணிகக் கப்பல்களைத் தாக்கிய பின்னர் அவை தீப்பிடித்து எரிந்தன.
இதில், ஒரு பணியாளர் கொல்லப்பட்டதாக துறைமுக அதிகாரிகள், கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஆபத்து நிறுவனங்கள் வியாழக்கிழமை (12) தெரிவித்தன.
இது தவிர ஈரான் பஹ்ரைனின் முஹாரக்கில் உள்ள ஒரு நிலையத்தில் உள்ள எரிபொருள் தொட்டிகளையும் குறிவைத்ததாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம், முக்கிய எண்ணெய் நுகர் நாடுகளைக் கொண்ட சர்வதேச எரிசக்தி நிறுவனம், புதன்கிழமை, 1970 களுக்குப் பின்னர் ஏற்பட்ட மோசமான எண்ணெய் அதிர்ச்சிகளில் ஒன்றைத் தணிக்க, உலகளாவிய மூலோபாய இருப்புக்களில் இருந்து 400 மில்லியன் பீப்பாய்களை விடுவிக்க பரிந்துரைத்தது – இது வரலாற்றில் மிகப்பெரிய தலையீடு ஆகும்.
இவ்வாறான பின்னணியில் அமெரிக்கா தனது மூலோபாய பெட்ரோலிய இருப்பிலிருந்து 172 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை விடுவிப்பதாகக் கூறியுள்ளது.
திட்டமிடப்பட்ட வெளியேற்ற விகிதங்களின் அடிப்படையில் இது வழங்க சுமார் 120 நாட்கள் ஆகும் என்று அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.













