கனடா அரசாங்க ஊழியர்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும் என்ற புதிய உத்தரவைத் தொடர்ந்து, போதிய இடவசதியை உறுதிப்படுத்தக் கூடுதல் அலுவலகப் பரப்புகளைக் கையகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக அலுவலகப் பரப்புகளைக் குறைப்பது குறித்து ஆலோசித்து வந்த கனடா மத்திய அரசு, தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் முதல் பொதுச் சேவை ஊழியர்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், சில இடங்களில் ஊழியர்களுக்கான ஆசன வசதிகள் (Work stations) பற்றாக்குறை ஏற்படும் என ‘பொதுச் சேவைகள் மற்றும் கொள்முதல் கனடா’ (PSPC) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அலுவலக இடப்பற்றாக்குறையைத் தீர்க்க அரசாங்கம் தற்போதுள்ள கட்டிடங்களின் குத்தகை காலத்தை நீடித்தல், பயன்படுத்தப்படாமல் இருக்கும் இடங்களை முறையாகப் பயன்படுத்துதல், தற்போதைய வசதிகள் போதுமானதாக இல்லாவிட்டால், கூடுதல் அலுவலக இடங்களைப் பெறுதல் அல்லது புதிய கட்டிடங்களை வாங்குதல் போன்ற உத்திகளை கையாள்கிறது.
இருப்பினும், எந்தெந்த நகரங்களில் இத்தகைய இடநெருக்கடி நிலவுகிறது என்பது குறித்த விபரங்களைப் பகிர PSPC மறுத்துவிட்டது.
அரசாங்கத்தின் புதிய உத்தரவின்படிமே 4 முதல் உயர் அதிகாரிகள் வாரத்திற்கு 5 நாட்களும் அலுவலகத்திற்கு வர வேண்டும்.
ஜூலை 6 முதல் ஏனைய அனைத்துப் பணியாளர்களும் வாரத்திற்கு 4 நாட்கள் அலுவலகத்திற்கு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கனடாவில் ஏற்கனவே பட்ஜெட்டில் இராணுவக் கட்டிடங்களை வீடமைப்புத் திட்டங்களுக்கு வழங்கத் தீர்மானித்திருந்த நிலையில், தற்போது ஊழியர்களுக்காகக் கூடுதல் அலுவலக இடங்களைத் தேட வேண்டிய சூழலுக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
















