ஸ்காட்லாந்தின் மிக உயர்ந்த குற்றவியல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, கொவிட்-19 பெருந்தொற்று காலத்திற்கு முற்பட்ட காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் தற்போது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக ‘ஆடிட் ஸ்காட்லாந்து’ (Audit Scotland) அமைப்பின் புதிய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
தீவிரமான திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் கடந்த கால வரலாற்றுடன் தொடர்புடைய பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்ற சிக்கலான வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதே இதற்குக் முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாத இறுதியில் வெளியான தரவுகளின்படி, ஸ்காட்லாந்து உயர் நீதிமன்றத்தில் சுமார் 1,000 குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு வராமல் தேங்கிக் கிடக்கின்றன.
இது பெருந்தொற்றுக்கு முந்தைய எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஒட்டுமொத்த நீதிமன்ற அமைப்பையும் கணக்கில் கொள்ளும்போது, திட்டமிடப்பட்ட வழக்குகளின் மொத்த நிலுவை எண்ணிக்கை 13,268 ஆகக் குறைந்துள்ளது.
இது கடந்த 2022ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட வழக்கின் தேக்க நிலையுடன் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வழக்குகளை விரைவாகக் கையாள்வதில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக ஆடிட் ஸ்காட்லாந்து கூறினாலும், உயர் நீதிமன்றங்களில் அதிகரித்துவரும் வழக்குகளின் பாரிய சுமை ஒட்டுமொத்த நீதித்துறை கட்டமைப்பிற்கும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.














