டெல்லியின் மால்வியா (Malviya) நகர் ஹோட்டலில் நேற்றைய (03) தினம் ஏற்பட்ட பெரும் தீ விபத்து குறித்த விசாரணையில், மின்கசிவு காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை விசாரித்து வரும் புலனாய்வாளர்கள், தீ விபத்திற்கான காரணம் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு அல்ல என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அந்த ஹொட்டலில் கட்டிடத்தின் அடித்தளத்திலும், மேல் தளத்திலும் இரண்டு தனித்தனி சமையலறைகள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு சமையலறைகளிலும் பல எரியாவு சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்தன, ஆனால் ஆரம்பகட்ட ஆய்வுகளில் சிலிண்டர் வெடித்ததற்கான எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
இந்த நிலையில், தீயின் தன்மை மற்றும் தீவிரத்தைக் கொண்டு பார்க்கையில், அது கட்டிடத்தின் உள் மின் வயரிங் அமைப்பில் ஏற்பட்ட மின் கோளாறால் தோன்றியிருக்கலாம் என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எவ்வாறெனினும், தடயவியல் குழு ஒன்று ஏற்கனவே கட்டிடத்தை ஆய்வு செய்து, அந்த இடத்திலிருந்து மாதிரிகளைச் சேகரித்துள்ளது.
தீ விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் சரியான காரணத்தை தீர்மானிப்பதற்காக, நிபுணர்கள் மின் அமைப்புகளையும், தீ பற்றிக்கொள்ள வாய்ப்புள்ள பிற மூலங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இறுதி முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மால்வியா நகர் ஹோட்டல் தீ விபத்தில் உயிரிழந்த 21 பேரில், ஆறு பேர் வெளிநாட்டினர் மற்றும் ஒன்பது பேர் இந்தியக் குடிமக்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீதமுள்ள ஆறு பேரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அதிகாரிகள், உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் முயற்சிகளைத் தொடர்வதோடு, இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.















