அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான 4 வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு, ஒவ்வொரு வழக்குக்கும் தலா 4 ஆண்டுகள் வீதம் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளதுடன், பிரதிவாதிக்கு 18 இலட்சம் ரூபா அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு சரண குணவர்தன அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றியிருந்தார்.
அக்காலப்பகுதியில், லொத்தர் சபைக்காக மூன்று வாகனங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட போது, அதன் உரிமையாளர்களுக்குச் சாதகமாகச் செயற்பட்டு அரசாங்கத்திற்குப் பெருமளவு நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த முறைகேடு தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சரண குணவர்தனவுக்கு எதிராகத் தனித்தனியாக 4 ஊழல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்கின் போது, குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 303 ஆவது பிரிவின் கீழ், தனது கட்சிக்காரரான சரண குணவர்தனவுக்குத் தண்டனை விதிக்கும் போது மென்போக்கைக் கையாளுமாறு பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இருப்பினும், இக்குற்றத்தின் தீவிரத் தன்மையைக் கருத்திற் கொள்ளும் போது, அரசு நிறுவனங்களில் இனிமேல் இவ்வாறான ஊழல்கள் இடம்பெறாமல் தடுத்து, அவற்றை ஊக்கமிழக்கச் செய்வதற்கு ஏதுவான வகையிலான கடுமையான தண்டனையொன்றையே நீதிமன்றம் வழங்க வேண்டும் எனக் கூறி நீதிபதி அக்கோரிக்கையை நிராகரித்தார்.

















