கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் வேகமாகப் பரவி வரும் இபோலா தொற்றுநோய் தொடர்பில் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இபோலா பரவல் அறிவிக்கப்பட்டு இரண்டரை மாதங்கள் கடந்துள்ள நிலையில், நிலைமை இதுவரை இல்லாத அளவுக்கு மோசமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின்படி, ஓகஸ்ட் முதலாம் திகதி வரை 3,605 உறுதிப்படுத்தப்பட்ட இபோலா தொற்று நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், இது கொங்கோவில் இதுவரை பதிவான மிகப்பெரிய இபோலா பரவலாக மாறியுள்ளது.
கடந்த 11 வாரங்களில் மட்டும் சுமார் 1,500 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய சந்தேகத்திற்கிடமான நோய்த்தொற்றுகள் தினசரி புதிய பகுதிகளில் பதிவாகி வருவதால், தற்போதைய மருத்துவ நடவடிக்கைகள் நோயின் பரவல் வேகத்தை கட்டுப்படுத்த போதுமானதாக இல்லை என எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இபோலா நோயாளிகளை கண்டறிதல் மற்றும் தொடர்புடையவர்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், அவை இன்னும் போதுமானதாக இல்லை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, புனியாவில் உள்ள எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு இபோலா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் 90 சதவீதம் பேர் முன்கூட்டியே கண்காணிக்கப்பட்ட தொடர்பாளர்கள் அல்ல என்றும், இதூரி மாகாணத்தில் மொத்த தொடர்பாளர்களில் 59 சதவீதம் மட்டுமே கண்காணிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் சமூகங்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பு இல்லாமல் இபோலா பரவலை கட்டுப்படுத்த முடியாது என எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சமூகங்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையினாலேயே புதிய தொற்றாளர்களை விரைவாக கண்டறிந்து, நோய் பரவலைத் தடுக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனுடன், மலேரியா, அம்மை, கொலரா, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பிற நோய்களும் தொடர்ந்தும் மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருப்பதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரித்துள்ளது.
எனவே, எபோலா சிகிச்சையுடன் இணைந்து அத்தியாவசிய சுகாதார சேவைகளும் தடையின்றி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மழைகாலம் ஆரம்பமாகியுள்ளதால் தொலைதூர பகுதிகளுக்கு மருத்துவ உதவிகளை கொண்டு செல்வதில் சவால்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவப் பொருட்கள், முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கான ஆதரவு மற்றும் மனிதாபிமான அமைப்புகளின் தடையற்ற அணுகலை உறுதி செய்வது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இபோலா பரவலை கட்டுப்படுத்த தொற்றுநோய் கண்காணிப்பை வலுப்படுத்துதல், சமூக பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் மனிதாபிமான அமைப்புகளுக்கு முழுமையான அணுகலை உறுதி செய்தல் ஆகியவை தற்போதைய முக்கிய முன்னுரிமைகளாக இருப்பதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்போது கிழக்கு கொங்கோவில் 1,400-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இபோலா தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதூரி, வடக்கு கிவு, தெற்கு கிவு மற்றும் சோப்போ மாகாணங்களில் 7 இபோலா சிகிச்சை மையங்களும், 15 க்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தல் பிரிவுகளும் இயங்கி வருகின்றன.
தொற்று ஆரம்பித்ததிலிருந்து 1,362-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 282 பேர் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்துள்ளனர் என்றும் அமைப்பு தெரிவித்துள்ளது.















