மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் நாளை (29) காலை 11.00 மணியுடன் முடிவடையும் 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
இலங்கையின் வடகிழக்கில் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘மோந்தா’ சூறாவளி காரணமாக, மேற்படி பகுதிகளில் மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.
இதனால், 22 மாவட்டங்களுக்கு பலத்த காற்று வீசும் என வளிமண்டலவைியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையையும், 03 மாவட்டங்களுக்கு மிதமான எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
எனவே, காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.















