ஜப்பானில் நிலவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். இதனையடுத்து அந்த நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி (வயது 64) தேர்வு செய்யப்பட்டார்.
இந்தநிலையில் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு முயற்சி எடுத்து வருகின்றார். இதன் முதல்கட்டமாக பிரதமர் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை குறைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளார். இதற்காக பொது ஊழியர் ஊதிய சட்டத்தை திருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதுதொடர்பான விவாதம் ஜப்பான் பாராளுமன்றத்தில் இன்று (11) நடைபெறவுள்ளது.
ஜப்பானை பொறுத்தவரை எம்.பி.க்களுக்கு ஒரு மாத சம்பளமாக அந்த நாட்டு ரூபாயில் 12.94 இலட்சம் யென் (ரூ.7 இலட்சத்து 42 ஆயிரம்) வழங்கப்படுகின்றது. இந்த தொகையில் இருந்து பிரதமருக்கு 11.52 இலட்சம் யென் (ரூ.6 இலட்சத்து 60 ஆயிரத்து 429) மற்றும் அமைச்சர்களுக்கு 4.89 இலட்சம் யென் (ரூ.2 இலட்சத்து 81 ஆயிரத்து 497) கூடுதலாக வழங்கப்படுகின்றது. ஆனால் செலவு குறைப்பு நடவடிக்கையின்படி கூடுதலாக வழங்கப்படும் தொகையில் இருந்து பிரதமர் 30 சதவீதமும், அமைச்சர்கள் 20 சதவீதமும் திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளனர்.
இதன்மூலம் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் முறையே ரூ.2 இலட்சத்து 24 ஆயிரத்து 589 மற்றும் ரூ.63 ஆயிரத்து 345 ஆக குறைக்கப்படும் என தலைமை அமைச்சரவை செயலாளர் மினோரு கிஹாரா தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகளும் வரவேற்பு தெரிவித்து உள்ளன. அதேசமயம் ஆளுங்கட்சியிலேயே இதற்கு சில எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

















