நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் வெஞ்சர் தோட்டப் பகுதியில் சுமார் 25வருடகாலமாக இயங்கிவந்த மதுபான சாலையினை மூடுமாறு கோரியும் மதுபான சாலைக்கான அனுமதி பத்திரத்தை இரத்து செய்யுமாறு கோரி இன்று (03) காலை பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் சிறுவர்களின் வாழ்வை சீர்குலைக்கும் மதுபோதை, பாடசாலைகளின் இடைவிலகளும் மதுபான சாலைகளும், வெஞ்சரின் எதிர்காலம் மதுபோதையில் என பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியும் கோஷங்களை வெளியிட்டும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த மதுபான சாலை இந்த பகுதியில் இயங்குகின்றமையால் ஆலயத்தில் இடம்பெறும் நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு மைதானத்தின் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வுகளுக்கும் இடையுரு விளைவிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தோட்ட பகுதியில் குறித்த மதுபான சாலை காணப்படுகின்றமையால் மாதாந்தம் புத்தகம் ஊடாக பதிவு செய்து வருகின்றனர் இதனால் பாடசாலை மாணவர்கள் இளைஞர்கள் யுவதிகள் என பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்குகின்றனர் .
இதேவேளை குறித்த பகுதியில் 1500குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் இந்த மதுபான சாலையினை உடனடியாக மூடுவதற்கு நாட்டின் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற பகுதிக்கு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
















