ரசிகர்களின் பெருத்த அவளுக்கு மத்தியில் நாளையத்தினம் வெளியாகவிருந்த விஜயின் இறுதி திரைப்படமான ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கிவருகின்றது.
இந்நிலையில் ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் சான்றிதழ் வழங்குவதற்கு தணிக்கைகுழுவுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றில் மனுதாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை நாளைய தினத்திற்கு (09) ஒத்தி வைத்தது.
இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.நிறுவனம் படத்தின் வெளியாகும் திகதியை ஒத்தி வைப்பதாக அறிவித்தது.
இதனால் ஆவலுடன் இருந்த ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களுக்கும் ஏமாற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக நடிகர் சிம்பு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் அந்த பதிவில், “அன்புள்ள விஜய் அண்ணா, இந்த பின்னடைவுகள் உங்களை ஒருபோதும் தடுத்ததில்லை. இதைவிடப் பெரிய புயல்களையே நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள். இதுவும் கடந்து போகும். ஜனநாயகன் வெளியாகும் நாளில்தான் உண்மையான திருவிழா தொடங்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, மலேசியா உள்ளிட்ட 39-க்கும் அதிகமான நாடுகளில் ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக, விநியோகஸ்தர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில் நாளைக்குள் (09) தீர்ப்பு வழங்குவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை நேற்று (7) நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்த நிலையில் தணிக்கை சபையின் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேஷனும், படக்குழு சார்பில் சதிஷ் பராசரன் மற்றும் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர்.
தணிக்கை குழு சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “பதில் மனு தாக்கல் செய்ய அனுமதித்தால் நீதிமன்றம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதில் அளிக்கப்படும்.
இப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது மத்திய அரசின் முடிவல்ல. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப தணிக்கை சபை தலைவருக்கு அதிகாரம் உள்ளது.
திரைப்படத்தில் பாதுகாப்புப் படைகளில் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும்.
ஜனநாயகன் படத்துக்கு எதிராக புகாரளித்தவர் தணிக்கைக் குழு உறுப்பினர்.
சில காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்த பின்னரும் கூட படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப அதிகாரம் உள்ளது.
இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் எந்த உள்நோக்கமும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
ஜனநாயகன் படக்குழு தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “பெரும்பான்மை உறுப்பினர் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரை செய்துள்ளனர். பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வுக்கு அனுப்ப முடியும். ஆனால், ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்” என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நீதிபதி பி.டி.ஆஷா, “ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்று மட்டுமே புகாரில் கூறப்பட்டுள்ளது, அந்த புகார் நிலைக்கத்தக்கதல்ல. படத்துக்கு யு/ஏ சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? யு/ஏ சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனி புகார் அளிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதனை தொடர்ந்து, ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில் நாளைக்குள் (09) தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார்.
ஜனநாயகன் படம் ஜன.9-ஆம் திகதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை (09) தீர்ப்பு வெளியாகும் எனத் தெரிவதால், இப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.




















