கடந்த 30ஆம் திகதி இரவு கொஹுவல, போதியத்த பகுதியில் வீடொன்றுக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி காயமடைந்த சம்பவத்திற்கு, உதவி மற்றும் ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கொஹுவல பொலிஸாரும் மொரட்டுவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்படி, மொரட்டுவை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் நேற்று தெமட்டகொடை மற்றும் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் வைத்து இந்தச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, கொஹுவல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் 27, 32 மற்றும் 35 வயதுடைய கொழும்பு 09 மற்றும் கொழும்பு 12 பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தக் குற்றத்தைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளைக் குற்றவாளிகளுக்கு வழங்கி உதவிய 32 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கடந்த 6ஆம் திகதி படோவிட்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன், கடந்த ஜனவரி 3ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபோவில பகுதியில் வைத்து ஏற்கனவே நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர், துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்தவர், துப்பாக்கியைக் கடத்தியவர் மற்றும் குற்றவாளிகளுக்குத் தங்குமிட வசதி செய்து கொடுத்தவர் ஆகியோர் அடங்குகின்றனர்.
இவர்கள் 25, 28, 33 மற்றும் 45 வயதுடையவர்களாவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.












