கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கா நிலையம் ஒன்றுக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பெண் உட்பட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், நான்கு பேர் காயமடைந்தும் இருந்தனர்.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து துப்பாக்கியுடன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல துப்பாக்கிதாரி பயன்படுத்திய முச்சக்கர வண்டியை ஆண் சந்தேக நபர் ஓட்டிச் சென்றதாகவும், பெண் சந்தேக நபர் குற்றத்திற்கு உதவியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் கடந்த 14 ஆம் திகதி நடந்தது, அதன் பின்னர் கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அதன்படி, நேற்று (27) கடவத்தை சூரியபலுவ பகுதியில் ஆண் சந்தேக நபரும், வெல்லம்பிட்டிய வெஹெரகொடெல்ல பகுதியில் பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான ஆண் சந்தேக நபரிடமிருந்து 6 கிராம் 540 மில்லி கிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளையும், பெண் சந்தேக நபரிடமிருந்து, 3 கிராம் 100 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளையும் கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கைப்பற்றினர்.
பின்னர் அவர்கள் கடற்கரை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
44 வயதான ஆண் சந்தேக நபர் சேதவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என்றும், 29 வயதான பெண் சந்தேக நபர் வெஹெரகொடெல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவருக்கும் ஏழு நாள் தடுப்பு உத்தரவும் பெறப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து கடற்கரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













