யாழில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டம் விதித்ததுடன் அவரது சாரதி அனுமதிப் பத்திரத்தையும் இரத்துச் செய்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 16ஆம் திகதி குறித்த நபர் காரைநகர் பகுதி வீதியால் தலைக்கவசம் இன்றி சென்றுள்ளார்.
இதன்போது அவரை வழிமறித்த ஊர்காவற்துறை பொலிஸார் அவர் மதுபோதையில் இருப்பதாக சந்தேகித்தனர்.
அதன்பின்னர் அவரை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது அவர் மதுபானம் பாவித்தமை உறுதி செய்யப்பட்டது.
பின்னர் அவரை பிணையில் விடுவித்தனர்.
அதன்பின்னர் அவரது வழக்கு கடந்த 20ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது அவர்மீதான குற்றம் உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவருக்கு 25 ஆயிரம் ரூபா தண்டம் விதித்ததுடன், சாரதி அனுமதிப் பத்திரமானது மூன்று மாதங்களுக்கு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தின் பின்னர் அதே நபர் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையின் உப தலைவராகவும் அண்மையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை மதுபானம் பாவித்துவிட்டு வீதியில் விழுந்து கிடந்த இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த, பிரதேச சபை ஒன்றின் தவிசாளர் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் பதவி நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













