திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள ஒரு நில வழக்கு தொடர்பான ஆவணங்களை திருடியதாக குற்றச்சாட்டப்படும் இரண்டு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எஸ்.எம். அன்பார் உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை துறைமுக பொலிஸார் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பிலான ஆவணம் திருடப்பட்டமை தொடர்பாக மாவட்ட நீதிமன்ற பதிவாளர் ராயப்பு ஜோமெல் ராய் குரூஸ், திருகோணமலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து, பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு சந்தேக நபர்களை கைது செய்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விசாரணை செய்த போது வழக்கு தொடர்பான ஆவணம் கிண்ணியாவில் உள்ள சந்தேக நபரது இல்லத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த ஆவணத்தை திருடுவதற்கு உதவிய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக துறைமுக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
திருகோணமலை மாவட்ட நீதிபதி கருப்பையா ஜீவராணி, மாவட்ட நீதிமன்றத்தின் இரண்டு ஊழியர்களால் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டது குறித்து மேலும் விசாரணை நடத்துமாறு நீதித்துறை சேவை ஆணைக்குழுவிற்குத் தெரிவிக்குமாறு மாவட்ட நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.














