இலங்கையில் அண்மைக்காலமாக சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறி வரும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துஷ்பிரயோகச் சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சமூகப் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.
ஆன்மீக வழிகாட்டியாகவும், சமூகத்தின் பாதுகாவலர்களாகவும் மதிக்கப்பட வேண்டிய மதகுருமார்களே இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிக் கைது செய்யப்படுவது, தார்மீக விழுமியங்கள் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
கண்டி, அம்பாறை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ள, மதகுருமார்கள் சம்பந்தப்பட்ட மூன்று முக்கிய பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
மத்திய மாகாணம் – கண்டி, பஹிரவகந்த பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பௌத்த மதகுரு (தேரர்) ஒருவரும், அவருக்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவரும் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில், பாதிக்கப்பட்ட 15 வயதுச் சிறுமியின் தந்தையின் சகோதரரே இந்தக் குற்றச்சாட்டுக்கு உள்ளான பௌத்த மதகுரு என்பது தெரியவந்துள்ளது.
பஹிரவகந்த பகுதியில் உள்ள விகாரையொன்றில் வசித்து வரும் 25 வயதுடைய இந்தத் தேரரும், அவருக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணும் கடந்த மே மாதம் 20ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
21ஆம் திகதி கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, தேரரை ஜூன் 01ஆம் திகதி (இன்று) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
அதேவேளை, இக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்த பெண், தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இதேவேளை, கிழக்கு மாகாணம் – அம்பாறை, இறக்காமம் பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான மௌலவி (இஸ்லாமிய மதபோதகர்) குற்றச்சாட்டு வௌியானதைத் தொடர்ந்து தப்பியோடித் தலைமறைவாகியிருந்தார்.
இறக்காமம் பொலிஸார் அவரைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், நேற்று அவர் தனது சட்டத்தரணி ஊடாக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகிச் சரணடைந்தார்.
அவரை வரும் ஜூன் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வன்கொடுமைக்கு உடந்தையாகவும், பிரதான சந்தேகநபருக்குத் துணையாகவும் இருந்த 21 வயதுடைய மற்றொரு மௌலவியும் பொலிஸாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது மருத்துவப் பரிசோதனைகளும், உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வரும் நிலையில், எரகம பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, அனுராதபுரத்தில் சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த, முக்கிய மதபீடத்தின் தலைவரான அதமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரரின் வழக்கு விசாரணை அனுராதபுரம் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரித்த அனுராதபுரம் நீதிமன்றம், சந்தேகநபரான பல்லேகம ஹேமரதன தேரரை கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க உத்தரவிட்டது.
அதன்படி, தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகள் மற்றும் 1 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையை நீதிமன்றில் செலுத்தியதை அடுத்து அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தேரருக்கு பிணை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான சட்டங்கள் இலங்கையில் கடுமையானதாகக் காணப்படும் போதிலும், மதத்தின் பெயராலும், குடும்ப உறவுகளின் நம்பிக்கையைப் பயன்படுத்தியும் இவ்வாறான கொடூரங்கள் தொடர்வது சமூகப் பாதுகாப்பின்மையைக் காட்டுகிறது.
இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்குச் சட்டத்தின் மூலம் முறையான தண்டனைகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். 













